Saturday, 23 June 2018

திரைக்கடலோடி



                                                            திரைக்கடலோடி 

நெடு நீலக்கடல் , தீரா உலா , சுளீர்க்காற்று , கடும் நிபந்தனைகள், விசித்திரவாடைகள் , நிகரற்ற எண்ணில் அடங்கா அனுபவங்கள் இவையாவும் நேற்றுடன் நிறைவுற்றது .

நான் பாரி  இந்திய கடற்படை லட்.கமாண்டர் - ஓய்வுபெற்ற ...

மேத்தா சார் தான் கடற்படை தேர்வுபற்றி கூறி என்னை தயார் படுத்தினார் .

அப்பாவிற்கு என்னைப்பிரிய விருப்பமில்லை எனினும் என்னுடன் தேர்விற்கு வந்தார் , என்னுடைய 17 ஆம் வயதின் மத்தியில் தேர்வாணை கிடைத்தது. அம்மா " எனக்கும் உன்ன அனுப்ப மனசில்லடா கண்ணு , ஆனா சர்க்கார் உத்தியோகம் கிடைச்சுருக்கே ! உன்னோட வாழ்க நல்லாயிருக்கும் பா , நம்ம நிலைமை மாறிடும் தைரியமா சேரு ராஜா " என்று கூறி அனுப்பிவைத்தார் .

சேர்ந்த புதிதில் கடும் சலிப்பு ஏற்பட்டது , இடைவிடாப்பயிற்சி , கட்டளைகள் , பல்வேறு கட்டுப்பாடுகள் , புதுப்புது நபர்கள் , வெவ்வேறு பாஷைகள் , திக்கு  தெரியா பாதைகள் .. 9 மாதங்கள் கப்பல் பயணம் , 3 மாதம் விடுப்பு !

முதல் மூன்று மாதத்தை கடத்துவதற்குள் வீட்டுநினைவுகள் வதைத்தன திடீரென அப்பா எதிரில் நிற்பது  , அம்மா பூஜை செய்வது , தொலைவில் அஜய் தம்பி விளையாடுவது , இப்படி மாயைகள் தோன்றி ஏங்க விடும், தற்போது உள்ளதுபோல் தகவல் தொழில்நுட்பம் பெருமளவு வளரவில்லை  குத்துமதிப்பாக  பேசுவது தான் ... இருந்திருந்தாலும் நடுக்கடலில் டவர் ஏது ?

இதுவே விடுப்பில் செல்லும்போதோ வீடே மிதப்பது போலவும் , மொட்டை மாடியிலிருந்து நடுக்கடல் தெரிவது போலவும் , மேலதிகாரி உரக்க கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்படும் .

பணியில் சலிப்போ , விரக்தியோ தோன்றும் சமயத்தில் மேத்தா அங்கிள் லேயே திட்டுவேன் .. அனால் உண்மையில் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்! 

சில சமயங்கிளில் ஒவ்வாமை , காது வலி , கண் எரிச்சல் , தோல் தடித்தல் , பெரும் சவாலாகவே இருந்தது வருடங்கள் செல்லச்செல்ல வேலை மிகவும் பிடித்துபோனது .

எங்கள் குடும்ப நிலையே மாறத்துவங்கியது  அஜய் நன்றாக படித்தான் , புள்ளியல் படிப்பில் சேர்ந்தான் , ஒருமுறை விடுப்பிற்கு வந்திருந்த சமயத்தில்  ஒரு பெரிய வண்டியை பிடித்து எங்கள் சொந்தபந்தங்களை நிரப்பி " குல தெய்வம் " கோயிலுக்கு போறோம் என்று கூறி ஒரு மாடி வீட்டின் முன் நிறுத்தினார் அப்பா ! எனக்கு விஷயம் புரிந்து சிலம்ப , காபியுடன் வந்து நின்ற இந்திராவை பார்த்து சமத்தாக மாறி சம்மதித்தேன் .

இரண்டு மூன்று முறை என்னுடன் தங்கினாள் நீண்ட தேன் நிலவாக கழிந்தது அந்நாட்கள் . பிறகு ரேணு , முரளியுடன் ஒருமுறை அது கோடை விடுமுறையாய் ..

என்னுடைய வேலையை நன்கு புரிந்து , எங்கள் பெற்றோர் , குழந்தைகள் , வீட்டு நிர்வாகம் , என்சார்பில் விசேஷங்களுக்கு விட்டுகுடுக்காமல் செல்வது, போன்ற யாவையும் இல்லக் கேப்டனாக செய்தாள் .

அஜய்யின் திருமணத்தை முன்னின்று நடத்தினாள் , சிலவருடம் வேலைக்கு சென்றாள் பிறகு  கணக்கு டியூஷன் , கிளாஸ் பெயின்டிங் , கைவினை வகுப்புகள் என ஓடிக்கொண்டே இருக்கிறாள் .. எந்த ஒரு சின்ன சலசலப்பையும் என்காதில் போடவே மாட்டாள் . முரளிக்கு விபத்து ஏற்பட்டது , ரேணுவின் காதல் கிளோபரங்கள் போன்றவற்றை நான் வரும்போதே அறிந்தேன் ..
 எனக்கான நண்பர் பட்டாளம், நள்ளிரவு விருந்துகள் ,உற்சாக பானங்கள் , கேளிக்கிகள் , உலக சுற்றுலாத்துறை கூட அறிந்திராத அருமையான இடங்கள் , வரைபடங்கள் காணாத சிறு நகரங்கள், அழகிய தீவுகள் , மொழி - கண்ட எல்லைகளை கடந்த கலாச்சார பரிமாற்றங்கள் , திரைப்படங்கள் ...

வெளிநாட்டு அதிகாரிகளுடனான கூட்டுப்பயிற்சிகள் , எல்லைக்கடல் ரோந்துகள்  , இருபெரும் தீவிபத்துகள் , கடற்கொள்ளையர் தாக்குதல்கள் , குடிதண்ணீரின்றி தவித்த தருணங்கள் , பல நுண் நுட்பங்கள் , சில உயரதிகாரிகளின் அடாவடிகள் , பல மேலதிகாரிகளின் ஊக்கம் , இவையெல்லாவற்றிற்கும் மேலாக நம் இந்திய தேசத்திற்கு பணியாற்றிய கவுரவம் , பாக்கியம் .

45 வயதில் ஓய்வு பெருகிறேனென்றால் இந்திரா  ஏற்படுத்தி கொடுத்த பொருளாதார சுதந்திரமே .

எனக்கும் போதுமெனப்பட்டது , ரேணு கல்யாணமாகி கனடா போயாச்சு , முரளி நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டான்   அம்மா , அப்பா , மாமனார் , மாமியார் முதலிய யாவரும் அதையே கூறி ஆமோதித்தனர் .

இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை , பிறகு அப்படியே இருக்க பிடிக்காமல் கச்சிதமான வேலை தேட துவங்கினேன் , ஸ்கூல் விட்டு வந்த விஷால் கப்பல் கத சொல்லுங்க பெரியப்பா என்று அன்பு தொல்லை புரிந்தான் , தாரா எனக்கும் அண்ணா என்று வந்து ஆவலாய் கேட்டாள் .. சில நேரம் கழிந்து வந்த அஜய் என்ன அண்ணே இன்னிக்கும் ஒரு கமாண்டர் கதையா ?  என்று நக்கல் அடித்துவிட்டு " இவங்களைவிட இந்த கத கடல்சார் கல்லூரி மாணவர்களுக்கு ரொம்ப அவசியம் , நா அங்க இருக்குற பிரின்ஸிபால்ட பேசிட்டேன் , நீங்க எப்போ வேணா சேந்துகோங்க " என்றான் .

நான் மிகவும் மகிழ்ந்து  என்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் ஐ துவங்கிவிட்டேன் , பாட புத்தகத்தில் இல்லாத பல நுட்பமான விஷயங்களை தெளிவாக புரியாவைப்பதாக பாராட்டுக்கள் வருகிறது .


                                                                  சா.ரா






















Sunday, 17 June 2018

நீர் நீர் ...

                                                                      நீர் ...



முப்பது வருசமாச்சு மெட்ராஸுக்கு  பொழைக்க வந்து , என்னவோ நேத்து ரயிலேறி வந்தாப்ல இருக்கு ...

பதினஞ்சு வயசுல எழுத படிக்க தெரியாம , டீக்கட , மல்லியக்கடை , காய்கறி மார்க்கட்டு , ஹோட்டல்கட , லாட்டரிசீட்டு , இப்புடி அல்லாடி அலைஞ்சு திரிஞ்சு ஆறுமுகம் மேஸ்திரி கிட்ட எடு பிடி சித்தாளா சேந்தேன் .

அப்போதான் மெட்ராஸ்ல ஓட்டுவீடுலாம் கான்க்ரீட்டா மாற ஆரமிச்சுது எனக்கும் வேல இருந்துகிட்டே இருந்துச்சு , அப்பிடுயே தொழில கத்துக்க ஆரமிச்சேன் .

கொஞ்ச வருஷம் கழிச்சு தண்ணி  பைப்பு ரிப்பேர் வேல , போர்வெல் வேலையும் கத்துக்கிட்டேன் , பத்து அடி தோண்டக்குள்ளேயே வெள்ளமா  தண்ணி பாயும் ...  வருஷம் போக போக கொஞ்சம் கொஞ்சமா என்னோட திறமைய  வளத்துக்கிட்டேன் .

அதிக மரங்களோட , பறவை சத்தம் , பண்பான மக்கள் , பரபரப்பு இல்லாத ரோடு , அகலமான சாலைகள் , அப்புடிப்பட்ட அருமையான மெட்ராஸ் .. இனிமே என்னோட கற்பனைல மட்டுமே பாக்க முடியுற  மெட்ராஸ் ...

மெட்ராஸ்க்கு சென்னைனு பேர மாத்துனதுலேந்து என்னோட வாழ்க்கையும் மாற ஆரமிச்சுட்டு,  எக்கச்சக்க கூட்டு வீடுங்க , அரசாங்க கட்டிடங்க , தனிவீடுங்க , கடைங்க , கம்பெனிங்க .. நாள் தவறாம  வருஷம்முழுக்க வேல .

குமரன் போர்வெல்ஸ்னு  சொந்த ஸ்தாபனம் தொடங்கி நிறையா ஆர்டர் எடுத்தோம் , நிக்கக்கூட  நேரமில்ல .

பொண்ண பேஷன் டேகினாலஜி படிக்க வெச்சு பெரிய எடத்துல கட்டிவெச்சேன், பெரியவன கம்ப்யூட்டர் படிக்க வெச்சு போன வருஷம் தான் கட்டிவெச்சேன் அவனும் கைநிறைய சம்பாதிக்குறான் , சின்னவன் தோட்டக்கலை சம்மந்தமா தான் படிப்பேன்னுடான் சரினு படிக்க வெச்சு அவனையும் " ஹாரி கல்ச்சரிஸ்ட்" ஆகிட்டேன் .

சின்னவன் என்னோட வேலையையும் பாதி பாத்துக்கிடறான் , அவனுக்கும் ஒரு நல்ல  பொண்ண பாத்து கட்டிவெக்கணும்.

ஆண்டவன் புண்ணியத்துல காசு பணத்துக்கு பஞ்சமில்லை , ஆனா நம்ம ஊருக்கு இப்புடி ஒரு தண்ணித்தட்டுப்பாடு வரும்னு  நெனச்சுக்கூடபாக்கல .. இப்போ தான் ஒரு சேவை  அமைப்புல சேந்தேன் அவங்க சொல்லிதான் எனக்கு விசயம் புரிஞ்சுது ..

எப்போவுமே தமிழ்நாட்டு ஜெனத்துல 20 சதவிதம் இங்க தான் இருப்பாங்க , இத நா முப்பது வருசமா பாக்குறேன் ..   ஏறி , குளம் , எல்லாம் பிளாட் வந்துட்டு இதுனாலதான் தண்ணி பஞ்சம்னு பரவலா சொல்லுறாங்க இப்போ  தாம்பரம் , போரூர் , தாமஸ் மவுண்ட் , இப்புடி எல்லா எடத்துளியும்  மஞ்சள்,சேப்புனு,பல கலர்ல தண்ணி.. !

சைதாப்பேட்டை , கிரோம்பேட்டை , அண்ணா நகர் , நுங்கம்பாக்கம் , பெரம்பூர் , இப்புடி எங்க பாத்தாலும் தண்ணி பஞ்சம் ... அடிக்கடி மோட்டர் அடிவாங்குது  100 அடியாதாண்டியும் நல்ல தண்ணி இல்ல.

நிறைய வீட்டு காரங்க மோட்டாரை போட்டுட்டு அப்புடியே விட்டுறாங்க .. நிறைய தண்ணி வீணாவும் கண்டுக்கவே மாட்டாங்க ! இதுக்காகவே பலபேர்கிட்ட சண்ட புடிச்சுருக்கேன் ஒரு பிரயோசமும் இல்ல தொண்ட தண்ணியும் செத்து வீணாச்சு.

இதுனாலயே நா ஆர்டர் எடுக்கிற வீட்டுக்கெல்லாம் இலவசமாவே ஆட்டோமாட்டிக் மோட்டார் போட்டு கொடுத்துக்கிட்டு வரேன் ..

சின்னவன் சொன்னான் ஒருவித கத்தாழை செடியை நட்டு வளத்தோம்னா நிலத்தடி தண்ணிய அப்புடியே வெச்சுக்கும்னு  , என்னோட நிலத்துல வெச்சுருக்கேன் நெசம்னா  அதையும் எங்க தொண்டு நிறுவனம் மூலமா  செய்வேன் ..

என்னால இதான் முடியும் ... கொட்டி தீக்குற மழை தண்ணிய கடலுல கலக்காம தடுக்க , பல வடிகால் முறை செய்ய , நீர் நிலைகளை சரி செய்ய அதிகாரம் என்னாண்ட இல்லையே .

இருவது வருஷம் முன்னாடி ஒரு லிட்டர் தண்ணி முப்பது ரூவான எல்லாரும் கிலுக்குனு சிரிச்சிருப்போம் .. இப்போ டெல்லிக்கு காத்தே மில்லிகிராம் முன்னூறு ரூவானு விலைக்கு வந்துட்டு ...


                                                         சா.ரா

Sunday, 10 June 2018

சுவை

                   சுவை
சுஜா போலாமா ? ,  கேப் வந்தாச்சு. . சீக்கிரம்!  நெடுநாள் கழித்து அத்திம்பேரை பார்க்கப்போகிறோம் :) அந்த குஷியில் பரபரத்தேன், சில தினங்களுக்கு முன்பு அத்தை, வைபவி அக்கா , சுபாஷினி,  ஆகியோரை நரேஷ் கல்யாணத்தில் சந்தித்தோம். . அத்திம்பேர் ஆடிட்டிங்கால் வரவில்லை . ஏறக்குறைய ஒன்றரை வருடம் இருக்கும் அவரைப் பார்த்தே!  


கேப் ஏறி OTP யை கூறிய கனம்முதல் அவருடைய இன்ப நினைவலைகள் ...
என்னைப் புரிந்து,   தீரா பாசம் மற்றும் அக்கறை காட்டுவார்.. 

              "திருகொலக்காவுல சைக்கிள் மிதித்தது போதும் மெட்ராஸ் வாங்கோ" என்று ஆணித்தரமாக கூறினார், அகையாலே தற்போது அடுத்த அன்னாநகரில் ... ஒரு முறை எனக்கு " டைபைட்" அறிகுறி தென்பட்டவுடேன தூக்கிக்கொன்டு ஆஸ்பத்திரியில் போட்டார் .. இப்படி எண்ணில் அடங்கா பல உதவிகள்!  அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று பலமுறை நினைத்துள்ளேன். ,ஒரு போன் கூட செய்ததில்லை. .. 

நெற்றியில் விபூதி, கோல்டன் பிரேம் கண்ணாடி,கபடமற்ற சிரிப்பு,வெண்மை வேட்டி , இவையெல்லாம் அவரது முத்திரைகள் என்றாலும் *காபி* தான்  அவரின் டிரேட்மார்க். 

மினுமினுக்கும் எவர்சில்வர் ஃப்ளாஸ்க் ,சிரிய பித்தளை டம்பளர், இவற்றை வைக்கேவ பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உறை,   சில அலுவலக பைல்கள் , அவற்றை எல்லாம் வைக்க நவீன ஜோல்னப்பை,இவற்றுடன்  டான் என்று 8 மணிக்கே  தனது தனியார் அலுவலகத்திற்கு புறப்பட்டு விடுவார். 

சுங்கம் மற்றும் மதிப்புகூட்டு வரித்துறை அதிகாரி அவர் , தற்போது ஜி.எஸ்.டி யிலும் புலி ! , எப்பேர்ப்பட்ட இடியாப்ப சிக்கலையும் களையும் திறன் படைத்தவர்,  பல அரசாங்க அதிகாரிகளும் இவரிடம் துறை சார் உதவி கோருவர் , எனினும்  சிபாரிசு என்று யாரிடம் நின்றதில்லை. . பலரும் அவரின் திறமையை ஏய்த்து   பலன் பெறுவர்,  இதனாலேயே அத்தையிடம் "பிழைக்கத்தெரியாதமனுஷன்" என்ற அர்ச்சனை வாங்குவார் ! 

" முக்கால் ஸ்பூன் ஜீனி, மூன்றை ஸ்பூன் காபிப்பொடி, நல்லாதட்டினப்பரம் வெந்நீர நேரா ஊத்தாம, சுத்தினாப்ல விட்டோம்னா டிகாஷன் திடமா இறங்கும் அப்பரம் பால தண்ணிசேக்காம. .. " என்று டிகிரி காப்பி தயாரிக்கும் முறையை பாடமே எடுப்பார்,  தனது அலுவலக மேலாளர் முதற்கொன்டு ,  அவரது காபியை பகிர்வர்.  

ஒரு முறை "எத்தியோப்பியா"விலிருந்து வந்திருந்த விற்பனைப்பிரிதி " காப்பியை கண்டுபிடித்த நாங்களே இவ்வளவு சுவையாக இதை பருகியதில்லை " என்று கூறி விட்டார்!  

அவருடன் ஒருமுறை ரயிலில் பயணிக்கையில் காபி/டீ விற்றவறை உள்ளே அழைத்து தனது காபியை அளித்து அவரை பரவசப்படுத்தி " நீங்க விக்குறது காப்பின்னா,  இது என்ன " என்று கேட்காமல் கேட்டார்.  

பிறகு திருச்சி " பத்மா கபே,  ஸ்ரீரங்கம் மீனாட்சி காபே, முரளீஸ் என்று எழுத்து வேந்தர் சுஜாதா குறிப்பிட்ட " அந்தன சாராயத்தின் " சாரத்தை உனரவைத்தார் !
" காரைக்குடி அண்ணப்பூரனா,  மதுரை  விசாலம் , ஆவனிமூலத்தெரு ஷண்முக விலாஸ், கும்பகோனம் வெங்கட்ராமா,  சிதம்பரம் ரமேஷ் கபே , சென்னை ஹாட் சிப்ஸ்,  ரத்ணா காபே,  பெங்களூரு  ஹத்தி கபே  ( ஜயா  நகர் )  ஹைதராபாத் கோஸ்டா "  இப்படி வாஷிங்டன் டி.சி வரை தனக்கென பிரத்யேகமான இடங்களில்  " வெந்நீர விட்டு கழுவு , ஸ்ட்ராங்கா குடுப்பா " என்று கூறி சுவைப்பார் .

வைபவி அக்கா கல்யாணத்தில் "காபி" ஸ்டால் போட்டு சித்தப்பா மற்றும்  என்னை போன்ற பலரை குதுகலப்படுத்தினார் .
ஒரு வழியாக 4 மணிக்கு கிளம்ய வண்டி நெரிசலில் ஊரி 6 மணி வாக்கில் திருமயிலையை அடைந்தது!

அத்தை அதே புன்னகையுடன் வரவேற்றார், இனிப்பு,  காரத்துடன் அரட்டை அடித்தோம் .

7 மணியளவில் வந்தார் அத்திம்பேர்,  மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவரும் உடை மாற்றி வந்து எங்களுடன் இணைந்தார்.." நான் காபி குடிக்கறத விட்டுட்டேன்" என்று பேரதிர்ச்சி அளித்தார் !
என்ன அத்திம்பேர் திடீர்னு? 
தெய்வத்தின் குரல் படிச்சேன்,  பரமாச்சார்யாள் வருத்தப்படறா அதான். .
மிகவும் பழகிய, பிடித்தமான விஷயத்தை நினைத்த ஷனத்தில் கைவிட ஞானிகலாலேயே  இயலும்! 
எனக்கு 2 கப் டிகிரிக்காப்பி தேவைப்பட்டது அவர் தந்த அதிர்ச்சியிருந்து மீள!  

*சா.ரா*

Sunday, 3 June 2018

பணி !

                                                              பணி !

பதினோரு மணி இருக்கும் , கும்மிருட்டு ஆளரவமற்ற சாலை , மொபட்டில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன் ., யாரோ பின்தொடர்வது போன்ற உணர்வு .. வண்டியின் வேகத்தை குறைத்தும் , நிறுத்தியும் சுற்றி முற்றிபாத்து மீண்டும் நகர்ந்தேன் சில நிமிடத்தில் "க்ளிங்" என்ற சப்தத்துடன் ரியர் கண்ணாடி தெறித்தது . 

சுதாரித்து திரும்புவதற்குள் மற்றொரு கல் நெற்றியை பதம் பார்த்தது .. லேசாக ரத்தமும் எட்டிப்பார்க்க சட்டென வேகமெடுத்தேன் . 

வீடு வந்து சேரும்போது இருதய துடிப்பு வெளியே கேட்டது  ! முகத்தை துடைத்து கொண்டு சாதாரணமாக உள்ளே நுழைந்தேன் சுசீலா சிடுசிடுத்தாள் ... ராகுல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

சுசியை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து உறங்க சென்றேன் நள்ளிரவை கடந்து நெடு நேரமாகியும் உறங்கமுடியவில்லை . வீட்டை சுற்றி வந்துகொண்டிருந்தேன் .. தனி வீடு காற்றோட்டம் புறநகர் ராகுலின் ப்ரீ ஸ்கூல் போன்ற பல வசதிகள் . உள்ளே நகர்கையில் ஜன்னல் மீது கல் வீச எத்தனித்த இரு இளைஞர்களை மடக்கி பிடித்து அடியை போட்டு விரட்டி விட்டேன் .

மீண்டும் சுசி  பொறிய ஆரமித்தாள் , " தெரிஞ்சுதானம்மா போலீஸ்காரன கட்டுன ? ..." என்று போலி கோபத்தை வெளிக்காட்டி சமாளித்தேன் .

மறுநாள் ஸ்டேஷனுக்கு நுழைந்தது முதல் ஒரே இலவச ஆலோசனைகள் .. "தனா" கிட்ட வம்பு வேணாம்  தனா பயங்கர தாதா , முரட்டு ஆளு , ரவுடி , அப்புடி இப்புடி என்று .... சற்று நேரம் கழித்து ரைட்டர் மகேஷ் வந்து " சார் நா வேணா தனா அண்ணன் கிட்ட பேசி காம்ப்ரமைஸ் பண்ணி விடவா " என்கையில் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்..  " சல்யூட்டை விடு ப்ரவீன் நிறைய சினிமா பாப்பியா  ? கொஞ்சமாச்சும் புரிஞ்சு நட யா " என்று நக்கலடித்து சென்றார் .

சற்று நேரத்தில் எஸ்.பி வாக்கியில் அழைத்து " கலக்குறீங்க மிஸ்டர் பிரவீன் , எதுக்கும் பயப்படாதீங்க , உங்கள மாதிரி ஒரு சில ஆளுங்க இருக்கிறதாலதான் நம்மள இன்னும் மதிக்கறாங்க , எதுவாக இருந்தாலும் என்னோட பர்சனல் நம்பர்லயே கூப்பிடுங்க , ஆல் தி பெஸ்ட் " என்றார் .

சற்று உற்சாகத்துடன் வீடு திரும்பினேன் வழியில் எந்த சில்மிஷமும் இல்லை , அடியபோட்டாதான் அசறுறானுங்க என்று நினைத்தபடி உள்ள நுழைந்தால் ... டிவி , பீரோ , ஜன்னல் கண்ணாடிகள் , என யாவையும் சுக்குநூறாகியிருந்தது ... ராகுலின் முகம் பயத்தில் வெளிறிவிட்டது .. சுசி பேசவே இல்லை, அவள் கண்களில் கோபக்கனல் ! 

இரெண்டே மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்டவர்களை பிடித்து லாடம் காட்டினேன் .. மொபைலை எடுத்து  "யோவ் காலேஜ் பசங்களுக்கு கோகைன் சப்ளை பண்ணும்போது உன் மவன கையும்களவுமா பிடிச்சிருக்கேன் , எதாருந்தாலும் கோர்ட்ல பாத்துகோ , பேடி தனமா ஒளிஞ்சிருந்து அடிக்கிற பாஸ்***ட்  " என்றேன்  தனாவிடம் .

தனவையும் உள்ளே தள்ள ஆதாரங்களை திரட்டினேன்          அப்போது " மிஸ்டர் பிரவீன் என்ன ட்ரான்ஸபெர் பண்ணிட்டாங்க , டேக் கேர் பீ அலர்ட் " என்று கூறி வைத்தார் எஸ்.பி ! மீண்டும் செல்லில்  அழைப்பு மனி  " ராகுலை காணும்முங்க என்று கேவி அழுதாள் சுசி ! " துடித்து போனேன் ...

நேராக தானாவின் வீட்டிற்கே சென்றேன் , மர நாற்காலியில் கம்பீரமாக உட்கார்திருந்தான் . , என்னுடைய ரிவோல்வர்ரை எடுத்து பட்..  பட்.. என மூன்று குண்டுகளை அவனது நெற்றியில்  ரத்தம் தெறிக்க  பாய்ச்சினேன் .....

 அப்படி கூற எனக்கும் ஆசை தான் ஆனால் அன்று அவன்  காலில் விழுந்து கதறி அழுது ராகுலை  மீட்டுவந்தேன் ..!  

போலீஸ் வேலை, ஊர்,நேர்மை ,  என எல்லாவற்றையும் விட்டு தள்ளி வெகு தூரம் வந்துவிட்டேன் .

தற்பொழுது நான் ஒரு தனியார் மருத்துவமனையின்  "செக்யூரிட்டி மேனேஜர்" , ராகுல் செகண்ட் ஸ்டாண்டர்ட் , சுசிலா சோ ஹாப்பி " .



 













 















'



Thursday, 17 May 2018

சூழற் கைதிகள்


                                                       சூழற் கைதிகள் 

நான் ஒரு Q.C பிரதிநிதி , அதாவது தயாரிக்கப்பட்ட கனரக எந்திரபாகங்களை தரசரிபார்ப்பிற்க்குப் பின் வாடிக்கையாளரின் வாகனத்தில் ஏற்றி அனுப்பும் பொறுப்பு என்னுடையது .

வேலைபளுவைவிட எனக்கு அளிக்கப்படும் சதா சர்வ காலமும் பாக்கு மென்றுகொண்டும் , கிழிந்த ஆடைகளை அணிந்துகொண்டும் , வினோத ஓசைகளை எழுப்பிக்கொண்டும் , கிடைக்கும் இடைவெளிகளில் சத்தமாக பாடல்களை ஒளி பரப்பிக்கொண்டும் , போன் பேசிக்கொண்டும் , எல்லாவற்றிற்கும் மேலாக கடின ... மிக கடின உழைப்பை தரும் வசதி , வேலைவாய்ப்புகளற்ற , வடஇந்திய கிராமங்களிலிருந்து வழின்றி  வந்து பணிபுரியும் "  பையா "க்கள் .

அவைர்களிடம் நானறிந்த சொற்ப ஹிந்தி வார்தைகளை பயன்படுத்தி வேலை வாங்கிவந்தேன் .

கோடைகாலம் தொடங்கியது முதல் வேலைக்கு வரும் பையாக்களின் எண்ணிக்கை குறைய ஆரமித்தது.. விசாரித்ததில் வருடம் முழுவதும் மூச்சு பிடிக்க , ஏச்சும் , பேச்சும், வாங்கி ( தத்தமது கான்ட்ராக்டரின் கமிஷன் போக ) சம்பாதித்த  பணத்தை அவரவர்களின் சொந்த ஊர்களில் சேர்ப்பித்துவிட்டு , சொற்பகாலம் ஓய்வெடுத்தபின் மீண்டும் இங்கேயே வந்து விடுவார் என அறிந்தேன் .

 இந்த இடைப்பட்ட நாட்களில் ஆட்பற்றாக்குறை பெரும் பாடாகிபோனது , பல சிறார்கள்  உள்ளே அனுமதிக்கப்பட்டனர் ... நித்தமும் ஆட்கள் மாறிக்கொண்டே இருந்தனர் ., ஆகையால் பயிற்றுவிப்பதே பெரிய வேலையாகி போனது !! , ஆகையால் தேக்க நிலையும்  அதிகரித்து நேரம் பாராமல் வேலை செய்துவந்தோம் .

வழக்கம்போல் அன்று காலையும் பலர் புதிதாய் வந்தனர் , அதில் ஒருவன் மிக சிறியவனாக  15 வயதுகூட நிரம்பாதவனாக தெரிந்தான் . அனால் வேளையில் படு சுறுசுறுப்பாக இருந்தான் .

எனினும் எனக்கு மனது உறுத்தியது , தவறு என்று பட்டது . எதேச்சையாக எதிரில்  H.R பாலா வந்துகொண்டிருந்தார் , வழக்கமான உரையாடலுக்கு பின்னர் அச்சூட்டி சிறுவனைப்பற்றி நாசுக்காக குறிப்பிட்டேன் , அவரரோ " விடுங்க பாஸ் கண்டுக்கிடாதீங்க , பயலுங்க வர்றதே பெரும் பாடா இருக்கு , நா பாத்துக்கிடறேன் .. யூ டோண்டு ஒர்ரி " என்று கூறி நழுவினார் .

 மதியம் " ஜி.எம்" கூப்பிட்டு அனுப்பினார் , " என்ன செல்வம் , வேலைலாம் எப்புடி போவுது , நிறையா கம்பளைண்ட்ஸ் உங்க மேல .. , புதுசா ரூல்ஸ்லாம் பேசறீங்களாம் . முடிஞ்சா குடுக்கற வேலைய பாருங்க இல்லாட்டி பல பேரு தவம்கிடக்கான் வேலைக்கு " என்று ஏடாகுடமாய் பேசி அனுப்பினார் .

இது பாலாவின் பற்றவைப்பு என்பது மட்டும் தெளிவாய் புரிந்தது .

வாடிய முகத்துடன் மீண்டும் பணியை தொடங்கிய சில நேரத்திலேயே              " உனக்கு ஏண்டா இதெல்லாம் ? , 3 மாசம் முன்னாடி பாதுகாப்பு அதிகாரியவே பாலிடிக்ஸ் பண்ணி அனுப்பிட்டான் அந்த பாலா , உனக்கு தெரியும்ல ? , பாத்துகோ அவ்ளோதான் சொல்லுவேன் "  என்று மனோஜ் அவன் பங்கிற்கு சொல்லிவிட்டு போனான் ... அறிதான அக்கறையுள்ள சகா !

 சில நாட்களுக்கு பின் பொருட்களை ஏற்றி அடுக்கையில் இரு ஆட்களுக்கு
(காலை 10 மணியளவில் ) காயம் ஏற்பட்டது , ஒருவனுக்கு லேசான காயம் முதலுதவி அளிக்கப்பட்டது .. மற்றொவனுக்கு விரல்களில் இருந்து ரத்தம் வெள்ளமாக கசிந்தது .. , அதுவும் நான் குறிப்பிட்ட அதே சுட்டி சிறுவனுக்கு !

அன்று பாலா விடுப்பில் இருந்ததால் நானே அவனை ஓட்டுநர் உதவியுடன் அருகேயுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன் , கையில் ஓரளவு காசு இருந்தால் எதற்கும் தாமதிக்காமல் " X -ரே , மருந்து , மாத்திரை , என ஏற்பாடு செய்தேன் .

அங்கு இருந்த இளைய மருத்துவரும் மிக அக்கறையுடனும் , சிறிது நேரத்தை கூட வீணடிக்காமலும் ,விவேகத்துடநும், செயல்பட்டு ரத்த கசிவை நிறுத்தினார் . புதிதாக படித்து முடித்தவர் போல என்று எண்ணிக்கொண்டேன் .

சில நேரம் கழித்து அறுவைசிகிச்சைக்கான பதிவேட்டில் கையொப்பம்மிட்டேன் , அவன் பெயர் " கந்தி மால் " என்றே  அப்போது தான் அறிந்தேன்! .

சிகிச்சைக்குப்பின் " அவனது இருவிரல்களும் நசுங்கிவிட்டது , அவற்றை நீக்கிவிட்டோம் ஒருவாரமாவது ஓய்வெடுக்கணும் , ரெண்டுநாள் இங்கயே இருக்கணும் , பிறகு பாத்துட்டு கட்டு பிரிப்போம் " என்றனர்.

மாலை 6.30 திற்கு மேல் சாவகாஸமாய் வந்தான் கந்தியின் காண்ட்ராக்டர் , வந்து அவனை ஏனோ தானோ என்று பார்த்துவிட்டு " டிஸ்சார்ஜ் " பண்ணிக்கிறேன் என்றான் .. நானோ எரிச்சலடைந்து ஆவேசப்பட்டேன் , அவன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் " சோர்தோ சார் , ஆப்கா பிராப்லெம் நஹி "  என்று கூறிக்கொண்டே அவனது செல் போனினை டயல் செய்து என்னிடம் நீட்டினான் .

மறுமுனையில் " நன்றி செல்வம் , பில்ஸளாம் அக்கவுண்ட்ஸ் ல கிளைம் பண்ணிக்ககிடுங்க, நா பாத்துக்கிடறேன் " என்றான் பாலா அதே விஷமத் தனத்துடன் .

இரண்டு , மூன்று நாட்கள் அதே  நினைப்பாகவே இருந்தது , அலுவலகத்தில் அவனைப் பற்றி யாரும் கேட்கவேயில்லை ...

ஒரே வாரதிற்குள்  கையில் கட்டும்பிரியாமல் , ரத்தவிளாறுடன், கந்தல் துணியை சுற்றிக்கொண்டு வேலைக்கே வந்துவிட்டான் " கந்தி "  !! , சற்று தள்ளி அவனது காண்ட்ராக்டர் எங்கள் இருவரையும் ஏளன புன்னகையுடன் பார்த்தான் .

சிலரின்  வறுமை  இங்கு பலருக்கு லாபம் , நானும் அவன் போன்ற ஒரு சூழ்நிலை கைதியே .


                                              ---------- ரா.சா





















Saturday, 12 May 2018

அழைப்பு



                                                            அழைப்பு 

பிடிக்காத வேலை சொற்ப சம்பளம் எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்து தாக்கு பிடித்து ஒட்டி ஓட்டிவருகிறேன் , நெடுநாட்களாகவே எனது அனுபவத்திற்கும் , திறமைக்கும் ஏற்ற வேலையை  தேடி வருகிறேன் கிட்டியப்பாடில்லை !!

வழக்கம் போல் ஒரு வெள்ளிக்கிழமை பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தேன் , மாலை 3 மணி வாக்கில் எனது செல் போன் சிணுங்கியது நானோ யாரோ இன்சூரன்ஸ் , பர்சனல் லோன் அல்லது கிளப்மெம்பர்ஷிப்புக்குக்கான அழைப்பு என்று எண்ணி அலட்சியமாக
 எடுத்தேன் ...

மறுமுனையில் நடுத்தர வயதுடைய கரகரப்பான குரலில் தன்னை  சென்னையைச் சேர்ந்த  பிரபல கார் தயாரிப்பாலையின்   " HR - கோவின்ட் " என தன்னை அறிமுக படுத்திக்கொண்டார் !

"MR.குமரேசன் உங்கள் CV யை வேலைவாய்ப்பு தளத்திலிருந்து தரவிரக்கம் செய்தோம் , நீங்கள் எங்கள் ஆளை உதவி மேலாளர் பணிக்கு மிகவும் பொருந்தியுள்ளீர் ஆகவே இன்னும் 10 அல்லது 15 நிமிடத்தில் எங்கள் தேர்வு குழுவிடமிருந்து மீண்டும் உங்களுக்கு ஒரு அழைப்பு வரும்  , அக்குழுவில்  மூவர் இடம் பெறுவோம் அதில் என்னை தவிர்த்து குரூப் சேர்மன் மற்றும் ஆலை தலைவர்
உடனிருப்பர்" என கூறி இணைப்பை துண்டித்தார்

நானோ செய்வதறியாது எனது மேலாரிடம் சென்று தலையை சொரிந்து , எதை எதையோ உளறி , குழறி 30 நிமிடங்கள் கீழே சென்று வர அனுமதி பெற்றேன் .

கீழே இறங்கி ஒரு நிசப்தமான இடத்தை தேர்வு செய்து அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன் , அழைப்பும் வந்தது .. " நம் வாழ்வயே மாற்றப்  போகும் திருப்புமுனை அழைப்பு " இதுதான் என திடமாக நம்பினேன் .

தேர்வு குழுவினர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சுருக்கமாகவும் , தெளிவாகவும் பதிலளித்தேன் , எல்லா வார்த்தைகளையும் நன்கு உள்வாங்கிய  பிறகே  பேசினேன் , பல கிடுகுக்குப்பிடி கேள்விகளுக்கு பதற்றமின்றி பதிலளித்தேன் .

இப்படியாக சுமார் 17 முதல் 20 நிமிடங்களை நீடித்த சம்பாஷணைகளின் முடிவில் மூவருமே கூட்டாக " MR.குமரேசன் , நீங்கள் நேர்முக தேர்விற்கு தேர்ந்தேடுக்கப்பட்டீர்கள் , விரைவில் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும்" என்றனர் !! மேலும்  90 சதவிகிதம் நீங்கள் தேர்வு செய்யப்பட்டது போல் தான் நீங்கள் நேரில் வருவது ஒரு சம்பிரதாயத்திற்கே , உங்களின் ஆரம்ப மாத சம்பளம் 28,000/- ( பிடித்தம் போக ) என்று கூறி என்னை திக்குமுக்காட செய்தனர் .

உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தேன் நான்  , சட்டென உங்கள் UG யை எங்கு முடித்தீர்கள் என்றார் கோவின்ட் " எனது UG மற்றும்  PG யை தொலைதூர கல்வி வாயிலாகவே பெற்றேன் , இதை எனது CV யிலும் தெளிவாக குறிப்பிட்டுளேன் " என்றேன் .

சாரி நா(ன்) சரியா  கவனிக்கல " AS PER OUR  NORMS , REGULAR GRADUATES ONLY ALLOWED TO WORK IN OUR MANAGEMENT TEAM" என்று அவசரமாக இணைப்பை துண்டித்தார் ...

மீண்டும் மேலே சென்று வழக்கமான பணியை தொடர்ந்தேன் , வந்த கண்ணீரும் சுவடே தெரியாமல் ஓடி ஒளிந்தது . மற்றொரு அழைப்பிற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் .



                                                                                                                       ரா.சா


Friday, 11 May 2018

ரயில் பயணத்தில்

                                                 ரயில் பயணத்தில் 


சனிக்கிழமை  மாலை 6:30 மணியை கடந்தும் முடியவில்லை எனது அலுவலக மீட்டிங் , எனது மனமோ " சென்னை எக்ஸ்பிரஸ்" ஐ  பிடிக்க தவித்து கொண்டிருந்தது ...

ஒரு வழியாக 9 மணிக்கு முடிந்தது பல அதிர் வேட்டுகளுடன்   , அதில் எனக்கு திங்கட்கிழமை காலை " எர்ணாகுளம் " சென்றே ஆஹ வேண்டும் என்ற பட்டாசு !

வேறு வழி இன்றி பெங்களூர் கெஸ்ட் ஹவுஸ்லேயே தங்கி காலை 4.30 திற்கே  எழுந்து (  ஞாயிற்று கிழமை  ! )  6 மணி ரயிலை பிடித்தேன் .. எனது ஜன்னல் ஒரே சீட்டில் அமர்ந்து பெங்களூருக்கு விடை கொடுத்து சிறிது நேரம் கழித்து சிற்றுண்டியை முடித்தேன் .

300 பாடல்கள் கொண்ட எனது மொபைல் MP3 ஐ ஆன் செய்து ஹெட் போனுடன் மெய் மறந்தேன் , ஆறே பாடல்கள் தாண்டுவதற்குள் சலிப்பு தட்டிவிட்டது ., பையில் இருந்த வார , மாத இதழ்களை புரட்டினேன் " சினிமா " பக்கங்கள் கடந்தவுடன் அசுவாரஸ்யம் ஏற்பட்டது , சரி அலுவலக செயல் திட்டம் திட்ட எத்தனித்தாலோ தலையே வெடித்தது !!

அதிசயமாய் எனக்கு தூக்கமும் வரவில்லை , ரயிலிலும் கூட்டமே இல்லை ... இருந்த சிலரும் " லாப் -டாப் " , போன் , தூக்கம் ,  என லைத்தனர் . இரெண்டே மணிநேரத்திற்குள் செய்வதறியா நிலை !!

மீதமுள்ள 9 மணி நேரத்தை நினைக்கவே கடுப்பானது .

சரியென்று  படிக்கட்டு கம்பி , கதவோரம்  நின்று  அதிவேக காற்று , வயல் வெளி , வழிபோக்கர் , உடன் வருவது போல மாய தோற்றமளிக்கும் மரங்கள் , கையசைக்கும் சுட்டிகள் , நெடியவளைவுகளில் தெரியும் முழு நீல ரயில் , வித விதமான ஓசைகள் , கடந்து செல்லும் அதிவேக ரயில்கள் என சற்று நேரம் ரசித்துவிட்டு நடக்க ஆரமித்தேன் ...

எமது பெட்டியில் இருந்து இறுதி பெட்டி வரை நடக்க ஆரமித்தேன் ... கிட்ட தட்ட ஒரு கிலோமீட்டர் .., வழியில் பல பல வியாபாரிகள் , பல காலாச்சார பிரயாணிகள் , திருநங்கைகள் , சில மாணவ பட்டாளம் , ராணுவவீரர்கள் , வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் , என பலரையும் கண்டு எமது இருக்கைக்கு மீண்டும் திடும்புகையில் 1 மணிநேரத்தை ஒழித்துக்கட்டியிருந்தேன் .

சிறிது நேரம் கழித்து எனதருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவர் வந்து அமர்ந்தார் ., " ப்ளீஸ் கிவ் யுவர் விண்டோ சீட் " என்றார் , நானும் நகர்ந்தேன் .

மிகவும் குஷியுடன் ஜன்னலை ரசித்தார் , சிறு பிள்ளை போல சீட்டி அடித்தார் .. கூலிங் கிளாஸ் , வெள்ளை தொப்பி , பெங்களூரு  ஸ்வட்டர் , ஜீன்ஸ் பாண்ட் , என ஜரூராக இருந்தார். பவுடர் மட்டும் சற்று அதீதம் .

என்னிடம் பேச்சு கொடுத்தார் , " ஆண்டவனாக அனுப்பிய டைம் பாஸ் " என எண்ணிக்கொண்டேன் . தான் ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி என்றும் , சென்ற வாரம் முதல் தென் இந்திய சுற்று பயணம் மேற்கொள்வதாகவும் , தான் சொந்த பணத்தில் சுதந்திரமாய் திரிவதாகவும் கூறினார் , இடையே தன்மகனிடம் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் நலமறிவித்தும் , நலம் விசாரித்தும் பேசி முடித்தார்  .

நாங்கள் இருவரும் குடும்பம் , அரசியல் , வேலை , பொருளாதாரம் , போன்ற பல விஷயங்களை பேசி தள்ளினோம் , அந்த ஸ்வாரசியத்தில்  திருப்பூர் , பாலக்காடு கடந்ததே தெரியவில்லை . சில நேரத்திலேயே அவர் இறங்க வேண்டிய " திருச்சூர் " வந்து விட்டது ..புன்னகையுடன் விடை பெற்றார் .

அவர் இறங்கியவுடன் வாழ்ந்தா இவர மாதிரி வாழனும் , 80 வயசுலயும் எவனையும் நம்பாம சொந்த கால்ல நிக்கணும் , கவர்மெண்ட் ஜாப் ட்ரை பண்ணனும் , சேமிக்கணும் , என்ன செய்யலாம் , என்ன என்ன செஞ்சுருக்கலாம் , வாழ்கை தடத்தையே மாத்தணும் , இப்படி பற்பல  எண்ணங்கள் தோன்றி சிந்தையின் உச்சத்தை அடையும்போது " எர்ணாகுளம் " என்ற பெயர் பலகை கண்ணில் பட்டது .


                                 



                                ___  ராம்பிரகாஷ் சாமிநாதன் .